தளி அருகே உடல் நலக் குறைவால் 20 வயது பெண் யானை இறந்தது. இதுதொடர்பாக வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்ட வனப் பகுதியில் 200- க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இதில் தளி வனச் சரகத்துக்கு உள்பட்ட தேவர்பெட்டா வனப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அருகில் உள்ள தேவர்பெட்டா, தாசரப்பள்ளி, சூடசந்திரம் கிராமங்களுக்குச் சென்று விளை நிலங்களில் ராகி, தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களைத் தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், சூடசந்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட தாசரப்பள்ளி கிராமம் அருகே வனப் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தது. இதை அந்த வழியாகச் சென்ற கிராம மக்கள் பார்த்து, தளி வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் பிரியதர்ஷிணி, வன உயிரினக் காப்பாளர் சஞ்சீவ் குமார், தளி வனச் சரகர் முருகேசன், தேவர்பெட்டா வனவர் செல்வராஜ் உள்ளிட்ட வனத் துறையினர் அங்கு சென்று காட்டு யானை இறந்தது குறித்து விசாரணை நடத்தினர்.
அதில் உயிரிழந்த காட்டு யானையின் வயிறு பெரிதாக இருந்தது தெரியவந்தது. இந்த யானை மற்ற யானைகளுடன் சேர்ந்து விளை நிலங்களுக்குச் சென்று பயிர்களைத் தின்றுள்ளது.
இதைத் தொடர்ந்து மற்ற யானைகள் அங்கிருந்து சென்ற நிலையில், இந்த யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இறந்துபோன யானை ஓராண்டுக்கு முன்பு குட்டியை ஈன்றுள்ளது. இதையடுத்து, உயிரிழந்த யானையை ஜவளகிரி கால்நடை மருத்துவர் பாரதிதாசன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்து, அருகிலேயே அடக்கம் செய்தனர்.