சூளகிரியில் சுகாதார வளாகம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் 2 வயது குழந்தை தவறி விழுந்ததில், நீரில் மூழ்கி உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள பஸ்தலப்பள்ளி ஊராட்சிக்குள்பட்டது சின்னகொத்தூர். இந்த ஊரைச் சேர்ந்த அமரேஷ், தொழிலாளி. இவரது மனைவி சுனந்தா. இவர்களுக்கு சோம்மூர்த்தி (5), சந்துரு (2) என்ற மகன்கள் உள்ளனர்.
வியாழக்கிழமை வீட்டருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சந்துரு மாயமானாராம். பல இடங்களில் அவரை பெற்றோர் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லையாம். இந்த நிலையில், குழந்தை சந்துருவின் வீட்டருகில் சுகாதார வளாகம் அமைப்பதற்காக 3 அடியில் குழி தோண்டப்பட்டிருந்தது. சமீபத்தில் பெய்த மழையில் அந்த குழியில் நீர் நிரம்பி காணப்பட்டது.
இந்த நிலையில், குழந்தை சந்துருவின் தலைப்பகுதி அந்த குழியின் மேலே தெரிவதைக் கண்ட அவரது பாட்டி திம்மக்கா அதிர்ச்சியில் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அமரேஷ், சுனந்தா உள்ளிட்டோர் அங்கு சென்று பார்த்த போது, குழிக்குள் குழந்தை சந்துரு இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த சூளகிரி போலீஸார் மற்றும் சூளகிரி வட்டாட்சியர் பெருமாள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.