வேப்பனஅள்ளி அருகே காட்டேரியில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வெளியேறியதில் நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆவல்நத்தம் கிராமத்தின் அருகே உள்ள காட்டேரி நிரம்பியது. ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், ஏரியின் கல்வெட்டின் சுவர் இடிந்தது. இதனால், ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள விளை நிலங்கள், கோயில்கள் நீரில் முழ்கின. இதனால் நெல், சிறுதானிய பயிர்கள் சேதம் அடைந்தன. ஏரி உடைப்பு குறித்து தகவல் அறிந்த வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அலுவலர்கள், பொதுமக்களின் உதவியுடன் மணல் மூட்டைகளை அடுக்கியும், ஜேசிபி இயந்திரம் மூலம் நீர் வெளியேறுவதை தடுக்கும் பணியில் விரைந்து ஈடுபட்டனர்.