கிருஷ்ணகிரியில் மாவட்ட காவல் துறை சார்பில், டெங்கு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வுகளுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.மகேஷ்குமார் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றப் பணியாளர்கள், வழக்குரைஞர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச் சாறு ஆகியவை வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை ஆயுதப்படை வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாமும் நடைபெற்றன. கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர், ஊர்க்காவல் படை, நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள், சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி, லண்டன்பேட்டை, பெங்களூரு சாலை, பழையபேட்டை வழியாகச் சென்று வட்டச் சாலை அருகே நிறைவு பெற்றது.
இதில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரியா ராஜ், நலப் பணிகள் இணை இயக்குநர் அசோக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார், நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், சுகாதார அலுவலர் மோகன சுந்தரம், காவல் ஆய்வாளர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.