கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, கிருஷ்ணகிரி அருகே பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே எண்ணேக்கொள்புதூர் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 180 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் 2 ஆசிரியர்கள், தலைமையாசிரியர் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும், பள்ளியை முறையாக நிர்வகிக்காத தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் வலியுறுத்தி இருந்தனர். ஆனால், கல்வித் துறை அலுவலர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந் நிலையில், பள்ளிக்கு சென்ற பெற்றோர்கள், வகுப்பறையில் இருந்த மாணவர்களை வெளியை அழைத்து வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த கல்வித் துறை அலுவலர்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று முற்றுகையிட்ட பெற்றோர்களை சமாதானப்படுத்தினர். கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள், தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்படுவார் என அலுவலர்கள் அளித்த உறுதியை ஏற்று, பெற்றோர்கள் கலைந்து சென்றனர். மாணவர்கள் வகுப்பறைக்கு திரும்பினர்.