சானமாவு வனப் பகுதிக்கு வந்த 4 யானைகளை வனத் துறையின் கண்காணித்து வருகின்றனர்.
ஒசூர் அருகே உள்ள சானமாவு வனப் பகுதியில், கடந்த 2 நாள்களுக்கு முன் 2 யானைகள் வந்தன. இந்த நிலையில், புதன்கிழமை இரவு மேலும் 2 யானைகள் வந்தன. மொத்தம் உள்ள 4 யானைகள் தற்போது சானமாவு காட்டில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளின் நடமாட்டத்தை வனத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதனால், அருகில் உள்ள ராமாபுரம், பீர்ஜேப்பள்ளி, ராஜாபுரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், வனப் பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு கவனமாக செல்ல வேண்டும் என்றும் வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
ஒசூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருவதால் யானைகளை விரட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த யானைகளை சினிகிரிபள்ளி, ஊடேதுர்க்கம் காடுகள் வழியாக ஜவளகிரி அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வனத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.