ஊத்தங்கரையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில், மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம், தர்னா ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போராட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க வட்டத் தலைவர் எல்.வேடி தலைமை வகித்தார். வட்டச் செயலர் ஏ.தாண்டவராயன் வரவேற்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் கலைவாணன், மாவட்ட துணைத் தலைவர் பி.தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருவாய் கிராம உதவியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டியும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டியும், 8-ஆவது ஊதியக்குழு அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தர்னாவில் ஈடுபட்டு முழக்கமிட்டனர். வட்டப் பொருளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
போச்சம்பள்ளியில்... ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். செயலர் செல்வராஜ், துணைச் செயலர் ராமசாமி, முன்னாள் மாவட்டத் தலைவர் மாரிமுத்து, தமிழரசு, ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.