கிருஷ்ணகிரியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் போதிய அளவு பணமில்லாததால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாயினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் சார்பில் 165 ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் போதிய பணம் இருப்பு இல்லை. சில வங்கிகளில் சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் தனது தேவைக்கு பணம் எடுக்க முயன்றால் குறைந்த அளவு ரூ.4 ஆயிரம் மட்டுமே எடுக்கும் நிலை இருந்தது. அதுவும் ரூ.100 மதிப்பிலான தாள்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஏடிஎம் மைய இயந்திரத்திலிருந்து பெறப்படும் பணமானது பழைய ரூபாய் தாள்களாக இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களது வங்கியின் ஏடிஎம் மையத்திலிருந்து தேவையான பணம் எடுக்க இயலாததால், தனியார் வங்கியின் ஏடிஎம் மையங்களை நாடிச் சென்றனர். இதனால், வங்கி வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இணையதள வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகளில் வங்கிகள் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.