மூத்த குடிமக்கள் நமது பொக்கிஷம் என கிருஷ்ணகிரி மாவட்ட நீதிபதி கே.அறிவொளி பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமந்தமலை சிகா (அறக்கட்டளை) வளாகத்தில் சமூக நலத் துறையின் சார்பில் சர்வதேச முதியோர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், மாவட்ட நீதிபதி கே.அறிவொளி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த நிகழ்வில், மாவட்ட நீதிபதி கே.அறிவொளி பேசியது: முதியவர்கள் நமது கலாசாரத்தையும், பண்பாட்டையும் கற்றுத் தந்தவர்கள். பெரும்பாலான பாட்டிகள் கதைகளை சொல்லி, நமக்கு ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை தெளிவுபடுத்தினர்.
மூத்த குடிமக்கள் நமது பொக்கிஷம். மூத்த குடிமக்களின் பிரச்னைகள் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் தீர்வு காணப்படுகிறது. முதியவர்கள் எந்த நிலையிலும், அவர்களின் பிரச்னைகளை எங்களிடம் தெரிவிக்கலாம் என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் பேசியது: இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது பெற்றோர்களை அன்பும், அரவணைப்போடும் காக்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்தை பிரித்து கொடுத்த நிலையில், பிள்ளைகள் அவர்களை கவனிக்காத நிலையில், பிரித்து கொடுத்த சொத்தை திரும்பப் பெற சட்டத்தில் இடம் உள்ளது.
முதியோர்களின் அனுபவம் தான் சிறந்த கல்வியாக திகழ்கிறது. அவர்களின் அறிவுரைகளையும், அனுபவங்களையும் மறக்கக் கூடாது. அவர்கள் நல்ல சத்தான உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றார்.