சூளகிரி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீஸார், காமன்தொட்டி பகுதியில் கடந்த மாதம் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மூன்று பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் ஒசூர் பார்வதி நகரைச் சேர்ந்த இம்ரான்கான் (20), அலேசீபம் பகுதியைச் சேர்ந்த முரளி (19), உத்தனப்பள்ளி அடுத்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முனிராஜ் (20) என்பதும், அவர்கள், காமன்தொட்டி அருகே கங்காபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை, கோபசந்திரம் பேருந்து நிறுத்தம் அருகே வைத்து மிரட்டி, செல்லிடப்பேசி மற்றும் ரூ.30 ஆயிரத்தைப் பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டதால் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எ.பி.மகேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் சி. கதிரவனுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.