காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை காலை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம், பெங்களூருக்குச் செல்ல வேண்டிய தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் தமிழக எல்லையான ஒசூரில் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், வேலூர், திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு செல்ல வேண்டிய தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் தமிழக எல்லையான ஒசூரில்
நிறுத்தப்பட்டன.
அதேபோன்று, பெங்களூரில் இருந்து ஒசூர் வரை இயக்கப்பட்ட கர்நாடக மாநிலப் பேருந்துகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்தப்பட்டன. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பயணிகள் ஒசூர் பேருந்து நிலையத்தில் தவித்தனர்.
தமிழக-கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் இரு மாநில போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.