கிருஷ்ணகிரி அணை அருகே சொத்துத் தகராறில் பெண்ணைக் கொலை செய்த விவசாயி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள துடுகனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதியின் மனைவி லட்சுமி(40). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருப்பதி உயிரிழந்த நிலையில், லட்சுமி, திருப்பதியின் அண்ணன் கோவிந்தசாமி(55) வீட்டின் அருகே வசித்து வந்தார்.
ஏற்கெனவே, லட்சுமிக்கும் கோவிந்தசாமிக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்ததாம்.
இதனால், இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில், வியாழக்கிழமை இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கோவிந்தசாமி, லட்சுமியை கட்டையால் தாக்கினாராம்.
இதில் பலத்த காயமடைந்த லட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை செய்தனர். மேலும் வழக்குப் பதிந்து, கோவிந்தசாமியைத் தேடி வந்தனர். இதற்கு இடையே, தலைமறைவான கோவிந்தசாமி, கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2-இல் நீதிபதி ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் சரணடைந்தார்.