ஒரு கட்டு கொத்தமல்லி ஒரு ரூபாய்க்கு விற்பனையாவதால், ஒசூர் மற்றும் சூளகிரி பகுதியில் கொத்தமல்லி பயிர் செய்த விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், உத்தனப்பள்ளி, தளி, தேன்கனிக்கோட்டை, பாகலூர், சூளகிரி, புலியரசி, செம்பரசனபள்ளி, மாரண்டபள்ளி, அத்திமுகம், ஒம்தேபள்ளி, செம்பரசனபள்ளி, மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கொத்தமல்லி அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஒசூர் மற்றும் சூளகிரி வட்டாரத்தில் இந்தாண்டு கொத்தமல்லி வரத்து அதிகரித்ததால், சந்தையில் இதன் விலை கடும் வீழ்ச்சியடைந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.20-க்கு விற்கப்பட்டது. வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த சில தினங்களாக ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.1-க்கு விற்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்துள்ளனர். மேலும் உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.