கிருஷ்ணகிரியில் புதிதாக வெளியான திரைப்படத்தை திருட்டு விசிடி தயாரிக்க உடந்தையாக இருந்த திரையரங்குக்கு போலீஸார் புதன்கிழமை "சீல்' வைத்தனர். மேலும் இது தொடர்பாக 3 பேரைக் கைது செய்த போலீஸார், திருட்டு விசிடி தயாரிக்க பயன்படுத்திய இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.
திரைப்பட இயக்குநர் விஜய மில்டன் இயக்கத்தில், பரத் சீனி தயாரிப்பில் உருவான திரைப்படம், அண்மையில் திரைக்கு வந்தது. இந்தப் படம் திரையிட்ட சில நாள்களிலேயே திருட்டு விசிடியும் வெளியானது. இதனால், பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் பரத் சீனி, உரிய ஆவணங்களுடன் வேலூர் திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்ததில், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு திரையரங்கில் இந்த திருட்டு விசிடி தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, வேலூர் திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு ஆய்வாளர் தாரணி தலைமையிலான போலீஸார், சம்பந்தப்பட்ட திரையரங்கில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்தத் திரையரங்கில் திருட்டு விசிடி தயாரிக்கப்பட்டது உறுதியானது.
இதையடுத்து, அந்தத் திரையரங்கை "சீல்' வைத்த போலீஸார், விசிடி தயாரிக்கப் பயன்படுத்திய இயந்திரங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக திரையரங்கு பணியாளர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.