கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை மனு அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம், இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் முருகன், செயலர் இளவரசன் உள்ளிட்டோர் அளித்த மனு: கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு ஆடவர் கலைக் கல்லூரி, அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி, மாவட்ட அரசு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தனியார் பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், அரசு கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் என 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த கல்வி நிறுவனங்களுக்கு தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.
கல்வி நிறுவனங்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால், ஒரே பேருந்தில் 150-க்கும் மேற்பட்டோர் பயணிக்கும் நிலை உள்ளது.
எனவே, மாணவ, மாணவியரின் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.