கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் கணினி இயக்குநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்துக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்.
இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் தட்டச்சு இளநிலை, ஆங்கிலம் தட்டச்சு முதுநிலை தேர்ச்சி பெற்றிருத்தல் மற்றும் நன்கு கணினி இயக்குபராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய சுய விண்ணப்பத்துடன் உரிய கல்வி மற்றும் இதரச் சான்றிதழ்களுடன் மார்ச் 31-ஆம் தேதிக்குள், கண்காணிப்பாளர், சிறுவருக்கான அரசு குழந்தைகள் இல்லம், பஞ்சப்பள்ளி, தருமபுரி மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.