கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் சிறுத்தைப் புலி நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மலைப் பகுதியில் யானை, சிறுத்தை, காட்டுப்பன்றிகள் போன்ற வனவிலங்குகள், மலைப்பாம்புகள் நடமாட்டம் இருந்து வருகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை சிறுத்தைகளின் நடமாட்டம் சூளகிரி பகுதியில் அதிகளவில் இருந்து வந்தது. சூளகிரி மலை, போகிபுரம், மாதர்சனப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள மலைக் குன்றுகளில் பதுங்கியிருந்து இரவு நேரங்களில் கிராமத்துக்குள் புகுந்து விவசாயிகளின் வளர்ப்பு ஆடு, மாடுகளை இரைக்காக தாக்கி கொண்டு சென்றன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பீதியுடன் காணப்பட்டனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சூளகிரி அருகே எலசேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவரின் விவசாயத் தோட்டத்தில் சிறுத்தைப் புலி ஒன்று நடமாடியதாகவும், அதனை சிலர் நேரில் பார்த்ததாகவும் கிராமத்தில் தகவல் பரவியது. மேலும், கடந்த 23 நாள்களாகவே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும், கிராமம் முழுவதும் பேசப்பட்டதால், எலசேபள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், வனத்துறையினர் இதனைத் தீவிரமாகக் கண்காணித்தும், சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்தால், அதை கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.