ஒசூரில் 10-ஆம் வகுப்பு மாணவியைக் கடத்தி கட்டாயத் திருமணம் செய்த இளைஞரை கைது செய்த போலீஸார், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஒசூர் வசந்த் நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனியார் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி மாயமானார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் ஒசூர் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாஸ் (25), தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக கூறியிருந்தனர். அதன் பேரில், ஒசூர் நகர அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சசிகலா விசாரணை நடத்தி சீனிவாசை கைது செய்தார். விசாரணையில், சிறுமியை கடத்தி ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கைதான சீனிவாஸ் மீது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.