பென்னாகரம் அருகே அனுமதியின்றி விவசாய நிலத்தில் தனியார் நிறுவனத்தின் மணல் குவாரி அமைப்பதற்கு, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சிக்குள்பட்ட பி.கோடுப்பட்டி பகுதியில் வசிக்கும் ராஜா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், தனியார் மணல் குவாரி அமைக்க அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இப்பகுதி மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். விவசாயத்துக்காக கிணற்றுப் பாசனத்தையே நம்பி வரும் நிலையில், விவசாய நிலத்தில் தனியார் மணல் குவாரி அமைக்க, அனுமதியின்றி சோதனைக்காக இரவு நேரங்களில் மணல் எடுக்கப்படுகிறது. அவ்வாறு மணல் எடுப்பதால் கனிமவளம் பாதிக்கப்பட்டு, அருகிலுள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணறுகள் வற்றிவிடும். மேலும், அனுமதியின்றி விவசாய நிலத்தில் மணல் எடுப்பதால், நீர்வளம் குறைந்து,விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசு நிலமாக மாறும் நிலை ஏற்படும். எனவே, அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.