தேன்கனிக்கோட்டை அருகே வீடு புகுந்து மின் வாரிய பொறியாளர், அவரது மகளைத் தாக்கியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி மின் வாரிய அலுவலகத்தில் பொறியாளராகப் பணியாற்றும் மாயவன்(56) தனது குடும்பத்துடன் அஞ்செட்டியில் வசித்து வந்தார். இந்த நிலையில், மட்டியூர் கிராமத்தில் உள்ள மின்மாற்றி பழுதடைந்தது. அந்த பழுதை சரி செய்ய, மின் பொறியாளரான மாயவன், அந்த கிராமத்தில் மின்சாரத்தை நிறுத்தி உள்ளார். இனால், அந்த கிராமம் இருளில் மூழ்கியது.
இதனால், ஆத்திரமடைந்த ஒரு கும்பல் மின் பொறியாளர் மாயவனை அவரது செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தனர். மேலும், அஞ்செட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற அந்த கும்பல், மாயவன் மற்றும் அவரது மகள் கோமதியைத் தாக்கிவிட்டு தப்பியது.
காயமடைந்த இருவரும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மாயவன் அளித்த புகாரின் பேரில் அஞ்செட்டி போலீஸார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன், தொட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, பழனி ஆகியோர் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.