பணியின் போது உயிரிழந்த படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். மாரத்தான் ஓட்டத்தை ஊத்தங்கரைஅரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் மாரிமுத்து கொடியசைத்து தொடக்கிவைத்தார். ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி, வட்டாட்சியார் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் வரவேற்றார். மினி மாரத்தான் போட்டி நீதிமன்ற அலுவலம் அருகே தொடங்கி புதிய நெடுஞ்சாலை வழியாக வந்து அரசு விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது.
போட்டியில் ஸ்ரீவித்யா மந்திர் கல்லூரி மாணவர்கள் ஜே.மணிகண்டன் முதலிடமும், எம்.சிவா இரண்டாமிடத்தையும், எஸ்.நவீன்குமார் மூன்றாமிடத்தை பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் சிங்காரபேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி செளம்யா மிஞ்சரா முதல் இடத்தையும், ஒரப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஸ்நேகா இரண்டாம் இடத்தையும், கிருஷ்ணகிரி சந்தியா மகளிர் கலை கல்லூரி மாணவி கோகிலா மூன்றாமிடத்தை பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், கோப்பைகள் வழங்கப்பட்டன.