ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டதால் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறையிடம் முறையிட்டும் தற்காலிகமாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காவல் துறை சார்பில் ஜேசிபி வாகனம் மூலம் மிகவும் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையிலிருந்த சாலையை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பெங்களூரு- புதுவை தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனினும், விபத்து ஏற்படுத்தும் வகையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகவுள்ளது.