சூளகிரி அருகே அடுத்தடுத்து லாரிகள் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள அட்டகுறுக்கியில் இருந்து சரக்கு வாகனம் ஒன்று சென்னைக்கு புதன்கிழமை இரவு சென்றது. அந்த லாரியை முன்னா (38) என்பவர் ஓட்டிச் சென்றார். அதனைத் தொடர்ந்து, ஒசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதிரிபாகங்களை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு ஒரு லாரி சென்றது. அந்த லாரியை திண்டிவனத்தைச் சேர்ந்த சண்முகம் (35) ஓட்டிச் சென்றார். இதை பின்தொடர்ந்து கிருஷ்ணகிரி நோக்கி ஒரு டிப்பர் லாரி சென்றது. இந்த நிலையில், சூளகிரி அருகே சப்படி பகுதியில் உள்ள ஒரு வளைவில் முன்னால் சென்ற சரக்கு வாகனத்தை உதிரிபாகங்கள் ஏற்றிச் சென்ற லாரி மோதியது. அதைத் தொடர்ந்து, பின்னால் வந்த டிப்பர் லாரியும் மோதியது. அடுத்தடுத்து லாரிகள் மோதியதில் உதிரிபாகங்களை ஏற்றிச் சென்ற லாரியின் ஓட்டுநர் சண்முகம் படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.