சூளகிரி வட்டாரத்தில் அளேசீபம் கிராமத்தில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்த மனு விவரம்: அளேசீபம் கிராமமானது ராயக்கோட்டையிலிருந்து ஒசூர் செல்லும் சாலையில் 11-ஆவது கி.மீ. தூரத்தில் உள்ளது. எங்கள் கிராமத்தைச் சுற்றி கொடகாரப்பள்ளி, வரதராஜபுரம், மாமரத்துப்பட்டி, பூவரசம்பட்டி, நடராலப்பள்ளி, பாலேபுரம், கொத்தூர், கரடிகுட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அளேசீபம் கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவர்கள் பணிக்கு முறையாக வருவதில்லையாம். இதனால், பொதுமக்கள் ராயக்கோட்டை அல்லது ஒசூருக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால், முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என அதில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.