கிருஷ்ணகிரியில் புதன்கிழமை (செப்.12) திறன் பயிற்சி விழிப்புணர்வு மேளா மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசால் திறன் பயிற்சி, திறன் விழிப்புணர்வு மற்றும் சந்தையில் நிலவும் வேலைவாய்ப்புகள் குறித்து கிராமப்புற இளைஞர்களை சென்றடையும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், முகாம் நடத்தப்பட உள்ளது.
இதன் முதல்கட்டமாக கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இளைஞர்களுக்கு திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செப்.12-ஆம் தேதி காலை 11 மணி திறன் பயிற்சி விழிப்புணர்வு மேளா மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு முகாம் நடைபெற உள்ளது. இதில், 5-ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.
எனவே, தாங்கள் விரும்பும் திறன் பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ், தொடர்புடைய தனியார் துறைகளில் வேலைவாய்ப்பும் அளிக்கப்படுகிறது. அத்துடன் இந்தப் பயிற்சியின்போது, போக்குவரத்து செலவினம், பயிற்சி புத்தகம், எழுதுபொருள்கள், புத்தகப்பை போன்றவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. எனவே, இந்தத் திறன் பயிற்சி விழிப்புணர்வு மேளாவில் கலந்துகொண்டு, திறன்பயிற்சிக்கு பதிவு செய்து, விரும்பும் பயிற்சியை இலவசமாக பெற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.