ஒகேனக்கல்லில் அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு பரிசல் இயக்கிய 5 பேரை ஒகேனக்கல் போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் காவிரியின் அழகைக் காண பரிசல் சவாரி செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஒகேனக்கல்லில் தண்ணீரின் அளவைப் பொருத்து பரிசல் இயக்க அனுமதியளிக்கப்படும்.
இந் நிலையில், செவ்வாய்க்கிழமை பரிசல் இயக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகளான ஆலாம்பாடி பரிசல் துறை மற்றும் ஊட்டமலை பரிசல் துறை ஆகிய பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு பரிசல் இயக்கப்படுவதாக ஒகேனக்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில், காவல் துணைஆய்வாளர் மாரி ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, ஊட்டமலை பரிசல் துறைப் பகுதியில் அனுமதியின்றி பரிசல் இயக்கிய ஊட்டமலை பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் வெங்கடேசன் (42), சின்னவன் மகன் சீனிவாசன் (42), கோவிந்தன் மகன் முருகன் (34), கோவிந்தன் மகன் கண்ணையன் (50) மற்றும் ராமர் மகன் நடராஜ் (52) ஆகிய 5 பேரை ஒகேனக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.