ஒசூர் அருகே கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் உடலுடன் அவரது உறவினர்கள், பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒசூர் தாலுகா தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் முனிராஜ் (33) . கடந்த 15 ந் தேதி மாயமானர். இந்த நிலையில் ஆனேக்கல் - அத்திப்பள்ளி இடையே பிருந்தாவன் கார்டன் என்ற இடத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம், ஆனேக்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு வந்த உறவினர்கள் தொரப்பள்ளி அக்ரஹாரம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் பகுதி பொதுமக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். முனிராஜ் கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதையடுத்து டி.எஸ்.பி. மீனாட்சி (ஒசூர்), சங்கர் (தேன்கனிக்கோட்டை), காவல் ஆய்வாளர்கள் லட்சுமணதாஸ் (ஒசூர் ), பெரியசாமி (அட்கோ), சரவணன் (சிப்காட்), முருகன் (சூளகிரி) மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதி அளித்தனர். கொலையுண்ட முனிராஜ் உடலுக்கு அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, இந்த கொலையில் தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர். இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி. மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் கொலையாளிகளை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.