விஷப் பூச்சி கடித்ததில் காயமடைந்த மாணவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
போச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்தூரில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் மாணவியர் தங்குவதற்காக அரசு சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி உள்ளது. இந்த விடுதியில் 20-க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி முடித்து விடுதிக்கு வந்த மாணவியர், கழிவறையில் தண்ணீர் இல்லாததால் இயற்கை உபாதை கழிக்க திறந்த வெளிப் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது மாணவி ஜெயஸ்ரீ என்பவரை விஷப்பூச்சி கடித்துள்ளது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த விடுதிக் காப்பாளர் அருணா, மாணவியை மீட்டு பண்ணந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர் கோகுல பிரீத்தி, தீவிர சிக்கிச்சைக்காக மாணவியை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.