திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 860 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை 75 நாள்கள் மருத்துவமனையில் வைத்து பராமரித்து குழந்தையின் எடையை 1.830 கிலோவாக அதிகரித்து, குழந்தையை காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே சீத்தாராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார்-வடிவுக்கரசி தம்பதிக்கு கடந்த 75 நாள்களுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் 860 கிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது.
கூலித் தொழிலாளியான ரவிக்குமார் தனியார் மருத்துவமனையில் வைத்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தார்.
அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தேன்மொழி மேற்பார்வையில் குழந்தைகள் நல மருத்துவர்கள் சேகர், பிரகாஷ் மற்றும் குழுவினர் கடந்த 75 நாள்களாக தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து குழந்தையின் எடை 1.830 கிலோவாக அதிகரித்தது. நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பதை உறுதி செய்து கொண்ட மருத்துவர்கள், குழந்தையை ரவிக்குமார்-வடிவுக்கரசி தம்பதியிடம் ஒப்படைத்தனர்.