ஆமையைக் கொன்று சமைத்து சாப்பிட்ட 2 பேருக்கு வனத்துறையினர் தலா ரூ. 2,500 அபராதம் விதித்தனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரம் மாற்றுப்பாதையில் உள்ள மூலக்குறிச்சி கிராமத்தில், சேலம் மாவட்ட வனத்துறையினர் மற்றும் முள்ளுக்குறிச்சி வனச்சரகர் அறிவழகன் ஆகியோர் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மூலக்கரை ஏரி அருகே உள்ள கிணற்றிலிருந்த ஆமைகளைப் பிடித்து இருவர் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இருவரையும் வனத்துறையினர் பிடித்து விசாரித்ததில் அவர்கள், மூலக்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்த குமார் (22), திருச்சி மாவட்டம், மெய்யம்பட்டியைச் சேர்ந்த ராஜா (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆமையைக் கொன்று தின்ற குற்றத்துக்காக இருவருக்கும் தலா ரூ. 2,500 வீதம் வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.