பரமத்தி வேலூர் அருகே சூரியம்பாளையத்தில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த ரூ. 50 ஆயிரம் பணம் உள்பட ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலானது.
கரூர் மாவட்டம் கடவூரைச் சேர்ந்தவர் பிச்சமுத்து (62). கூலித் தொழிலாளியான இவர், சூரியம்பாளையத்தில் தனியாக ஓலை வேய்ந்த வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இவரது குடிசை வெள்ளிக்கிழமை தீப்பற்றி எரிந்துள்ளது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
இந்த விபத்தில் வீட்டிலிருந்த ரூ. 50 ஆயிரம் பணம், நகை உள்பட அத்தியாவசியப் பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலானது. பரமத்தி போலீஸார் விசாரிக்கின்றனர்.
கோயில் அருகே தீவிபத்து... அதுபோல பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் கோயில் காவிரி கரையோரப் பகுதியில் வனத் துறைக்குச் சொந்தமான குட்டுக்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை தீப்பற்றி எரிந்ததில் பல்வேறு மரங்கள் கருகின.
பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் ஆலய பகுதியில் உள்ள குட்டுக்காடு பகுதியில் மயானம் உள்ளது. இந்த மயான பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல்வேறு மரங்கள் தீயில் எரிந்து கருகின. பரமத்தி வேலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.