மே 1-இல் கிராம சபைக் கூட்டம்: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வரும் மே மாதம் 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கூட்டத்தில் குடிநீர் சிக்கனமாகப் பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், அந்தியோதயா இயக்க செயலாக்கம், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவுகள் குறித்த விவாதிக்க வேண்டும்.
மேலும் திட்ட அறிக்கை தயாரித்தல், சுகாதாரம் மேம்படுத்துதல், தாய் திட்டம் செயலாக்கம், ஊராட்சியில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகள் மற்றும் நிதி செலவினம், தனி அலுவலரால் கொண்டுவரப்படும் இதர தீர்மானங்கள் குறித்து விவாதித்து நிறைவேற்றப்பட வேண்டும்.
மே 1-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வரும் திங்கள்கிழமை (மே 1)நாமக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களை மூட வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் வரும் திங்கள்கிழமை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அன்றைய தினம் இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.