குடும்பப் பிரச்னையில் இளைஞரை கட்டையால் அடித்துக் கொலை செய்த வழக்கில் உறவினர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே வட்டமலை ஜோதி நகரைச் சேர்ந்தவர் குமார் என்ற நல்லகுமார் (26). இவருக்கும், இவரது மனைவி லட்சுமியின் உறவினர் சந்திரன் என்பவரின் மகன்கள் திருமுருகன் (29), மணிவண்ணன் (24) ஆகியோருக்கும் இடையே கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி நல்லகுமாரின் உறவினர் பெண்ணை பொங்கல் பண்டிகைக்கு அழைப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அப்போது 3 பேரும் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். திடீரென திருமுருகன், மணிவண்ணன் இருவரும் சேர்ந்து மரக்கட்டையால் நல்லகுமாரைத் தாக்கினராம். இதில் பலத்த காயம் அடைந்த நல்லகுமார் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி 5 நாள்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.
இதுகுறித்து நல்லகுமார் மனைவி லட்சுமி அளித்த புகாரின் பேரில் குமாரபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருமுருகன், மணிவண்ணன் இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சம்பத்குமார் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
குற்றம்சாட்டப்பட்ட திருமுருகன், மணிவண்ணன் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதை ஏக காலத்தில் அனுபவிக்கவும், தலா ரூ.2,000 அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.