பரமத்தி வேலூரில் இரண்டு இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கான பூமி பூஜையை வெள்ளிக்கிழமை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் துவக்கி வைத்தார்.
பரமத்தி வேலூர் வட்டத்தில் குடிநீர்த் தட்டுபாடு காரணமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் அடிக்கடி சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் தனது மேம்பாட்டு நிதியில் இருந்து பரமத்தி வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 16, 17-வது வார்டுகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறு மற்றும் குடிநீர்த் தொட்டி அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கான பூமி பூஜையைத் துவக்கி வைத்தார். இதில் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல், பரமத்தி அருகே உள்ள கோதூர் ஊராட்சிக்கு உட்பட்ட குழந்தாபாளையம் கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறு மற்றும் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் பரமத்தி வேலூர் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர் ஜமால் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.