பரமத்தி வேலூர் அருகே மினி ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட மணலை போலீஸார் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனர்.
பரமத்தி வேலூர் போலீஸார் அணிச்சம்பாளைம் பகுதியில் சனிக்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி ஆட்டோ ஓட்டுநர் போலீஸாரைக் கண்டதும் ஆட்டோவை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
போலீஸார் ஆட்டோவை சோதனை செய்ததில் அதில் காவிரி ஆற்றிலிருந்து மணல் கடத்திச் செல்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மினி ஆட்டோவை போலீஸார் பறிமுதல் செய்து ஆட்டோ ஓட்டுநரைத் தேடி வந்தனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மினி ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய அணிச்சம்பாளையத்தைச் சேர்ந்த கண்ணதாசன் (35), மருதசூரியா (19) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.