ராசிபுரத்தில் அம்பேத்கர் பேனர் வைக்க போலீஸார் அனுமதி மறுத்ததால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராசிபுரத்தில் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரிகேட்டில் பேனர் வைத்திருந்தனர். இதற்கு போக்குவரத்து காவல் துறையினர் எதிர்ப்புத் தெரிவித்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரை அப்புறப்படுத்தினராம்.
இதனால் ஆத்திரமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ராசிபுரம்-சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.