தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க பேளுக்குறிச்சி கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட அளவில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட அளவில் 60 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் 113 படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன. பேளுக்குறிச்சி கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், நொச்சி, வேம்பு, துளசி, தும்பை செடிகளைப் பயன்படுத்தி கொசு விரட்டி தயாரித்தல், ஊசல் சுவர் கடிகாரத்திலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து செல்லிடப்பேசிக்கு மின்னேற்றம் செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வாகனத்தை மின் வாகனமாக மாற்றுதல் ஆகிய ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
இதில் ஊசல் சுவர் கடிகாரத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆய்வுக் கட்டுரையுடன் மொத்தம் 13 படைப்புகள் மாநில அளவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம், வரும் டிச. 9-இல் சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க கலைமகள் மெட்ரிக் பள்ளி தகுதி பெற்றது. இம்மாணவர்களை கலைமகள் பள்ளியின் தாளாளர் பி.துரைமுருகன், முதல்வர் ஆர்.எஸ்.புனிதா, இயற்பியல் ஆசிரியர்கள் தி.பிரகாசம், பி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து ஆசிரிய ஆசிரியைகளும், மாணவர்களும் பாராட்டினர்.