திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர் குட்டையால், குழந்தைகள் பெரிதும் பாதிக்க்ப்படுகின்றனர்.
எட்டிமடை புதூரில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையத்துக்கு அருகே கழிவுநீர் குட்டை கடந்த சில மாதங்களாகத் தேங்கியுள்ளது. அங்கன்வாடி மையத்துக்கு தினம்தோறும் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வருகை புரிந்து வருகின்றனர்.
இங்கு காலை முதல் மதியம் வரை குழந்தைகள் இருக்கும் நிலையில், கழிவுநீர் குட்டையில் இருந்து வரும் துர்நாற்றத்தாலும், கொசுக்களாலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதன்காரணமாக, குழந்தைகள் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படும் சூழ்நிலை அண்மைக்காலமாக ஏற்பட்டுவருகிறது. ஆகவே, மையத்துக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது.
இந்த நிலையில், தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளதாலும், வைரஸ் காய்ச்சல் பரவும் சூழல் நிலவுவதாலும் கழிவுநீர் குட்டையை உடனடியாக அகற்றி, சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.