நாமக்கல்லில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் முருகன், வள்ளியூர் வழக்குரைஞர் செம்மணி ஆகியோருக்கு எதிராக போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்து, தமிழ்நாடு- புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் பல்வேறு இடங்களில் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் உள்ளிட்ட நீதிமன்றங்களிலும் 1,076 வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த கூட்டுக் குழுவின் துணைத் தலைவர் ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியது:-
வழக்குரைஞர்கள் மீது போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்வது அதிகரித்துவருகிறது. வழக்குரைஞர் செம்மணியைத் தாக்கிய போலீஸார் மீது இதுவரை எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அவருக்காக வாதாடிய வழக்குரைஞர் முருகன் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கும்பகோணம், திருத்துறைப்பூண்டி பகுதிகளில் வழக்குரைஞர்களை போலீஸார் அவமதித்ததுள்ளனர். போலீஸாரின் இந்தச் செயல்களைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
மேலும், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் தேர்வு அரசிதழ் வெளியீடு, வாடகை ஒப்பந்த சட்டத் திருத்தம், பிறப்பு- இறப்பு பதிவு சட்டத் திருத்தம், நீதிமன்றக் கட்டண உயர்வு போன்றவற்றை வரும் 31-ஆம் தேதிக்குள் திரும்ப பெற வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார்.