நாமக்கல் பகுதி மளிகைக் கடைகளில் அயோடின் கலந்த உப்பு விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ரமேஷ்குமார் மேற்பார்வையில் நாமக்கல் அருகே எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் செல்வம் தலைமையில் சுகாதாரத் துறை அலுவலர்கள் நாமக்கல், அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள மளிகைக் கடைகளில் அயோடின் கலந்த உப்பு விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது 10 கடைகளில் மாதிரி எடுத்து சென்னைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அயோடின் கலக்காத உப்பு பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அனைத்து மளிகைக் கடையினரும் அயோடின் கலந்த உப்புகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
சுகாதார ஆய்வாளர்கள் முகமது ரபீக், இளங்கோ, பெரியசாமி, ராஜகணபதி ஆகியோர் உடனிருந்தனர்.