கதிராமங்கலம் கிராம மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், குமாரபாளையத்தில் தொடர்முழக்கப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமைநடைபெற்றது.
பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
திமுக நகரச் செயலர் கோ.வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலர் எஸ்.பாலுசாமி, வாழ்வுரிமை கலை பண்பாட்டுக் கழக அமைப்பாளர் சமர்ப்பா குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக மாவட்டத் துணைச் செயலர் எஸ்.சேகர், வழக்குரைஞர்கள் ப.மா.பாலமுருகன், என்.கார்த்திகேயன், ஏஐசிசிடியூ மாவட்டத் துணைத் தலைவர் கே.ஆர்.குமாரசாமி, திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலர் மு.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கதிராமங்கலம் கிராமத்தைவிட்டு காவல்துறை உடனடியாக வெளியேற வேண்டும். போராட்டத்தில் கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்ய வேண்டும். ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். டெல்டா பகுதி வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.