கோயில்களில் தரிசனத்துக்கு கட்டணத்தை ரத்து செய்யக் கோரி, பரமத்தி வேலூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்பொழுது ஒலிபெருக்கி வைப்பதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினரை கண்டித்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
காணிக்கைகளை ஹிந்துக்களின் கலாசாரம், பண்பாடு, ஆன்மிக வகுப்புக் கல்வி- மருத்துவத்துக்கே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மாவட்டப் பொருளாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகரப் பொதுச் செயலர் நிர்மல்குமார் வரவேற்றார். மாவட்டப் பொதுச் செயலர் கோபிநாத், மாவட்டச் செயலர்கள் சரவணன், கணேசன், பாரதிய ஜனதா கட்சி மாவட்டச் செயலர் காந்தி, மாவட்டத் துணைத் தலைவர் இளமுருகன், கபிலர்மலை ஒன்றியச் செயலர்கள் ஜெகதீசன், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, ஒலிபெருக்கியில் பேச அனுமதி தராத காவல்துறையினரை கண்டித்து திடீரென வாயில் கருப்புப் துணியைக் கட்டிக் கொண்டு, பேருந்து நிலையம் அருகே அவர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதையடுத்து, 50-க்கும் மேற்பட்டோரை டிஎஸ்பி சுஜாதா தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.