குடிபோதையில் தாத்தாவைக் கொலை செய்த பேரனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாதுரை (75). அவரது மகன் சுப்ரமணியன், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். மருமகள் சீதா (45), பேரன் மணிராஜா (20) ஆகியோருடன் அய்யாதுரை வாழ்ந்து வந்தார். மது அருந்தும் பழக்கம் உள்ள மணிராஜா திங்கள்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அவருக்கு தாயார் சீதா, உணவு பரிமாறியுள்ளார். அப்போது குழம்பு சரியில்லை எனக் கூறி தாயிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது அய்யாதுரை பேரனைத் தட்டிக் கேட்டாராம். அதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆவேசமடைந்த மணிராஜா, தனது தாத்தாவை தள்ளி விட்டுள்ளார். இதில் கீழே விழுந்த அய்யாதுரைக்கு தலையில் அடிபட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த எருமப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணிராஜாவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.