மோகனூர் பேரூராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மோகனூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மோகனூர் பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பேரூர் செயலர் ச.பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பழ.மணிமாறன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார்.
பேரூராட்சி 1-ஆவது வார்டு இந்திரா காலனி நகர் கழிவுநீரை குழாய் மூலம் பெரியார் நகர் பகுதியில் விடுவதால் பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன. நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது.
அவற்றைத் தடுக்காத செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 6, 7-ஆவது வார்டுகளில், பெண்கள் கழிப்பிடம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும் கடந்த ஓராண்டாக தண்ணீர் வரவில்லை.
அதே பகுதியில், ஆண்களுக்கான கழிப்பிடம், சமூதாயக் கூடம் கட்டித்தர தொடர்ந்து வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீரும் 20 நாள்களுக்கு ஒரு முறை தான் விநியோகம் செய்யப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி என்பதால், பேரூராட்சி நிர்வாகம் அடிப்படை வசதி செய்து தராமல் புறக்கணித்து வருகிறது. எனவே, இப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில், மாவட்டப் பொருளர் வ.அரசன், துணைச் செயலர் ஆ.நீலவானத்து நிலவன், நாமக்கல் தொகுதிச் செயலர் த.ஆற்றலரசு, பேரூர் பொருளர் ஆ.பேரறிவாளன், துணைச் செயலர்கள் சு.பாரதிதாசன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.