ஆத்தூர் ரயில் நிலையத்துக்கு வந்த சிறப்பு அறிவியல் ரயில் கண்காட்சியை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் குறித்து பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அறிவியல் கண்காட்சி ரயில் நாட்டில் 68 ரயில் நிலையங்களுக்கு இயக்கப்படுகிறது.
முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் இந்த ரயிலில் உள்ள அறிவியல் கண்காட்சியை மாணவர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த ரயில் ஆத்தூர் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்திருந்தது. இதையடுத்து அறிவியல் கண்காட்சியைப் பார்வையிட பல்வேறு இடங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 40 பேர், ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 40 பேர், ஆசிரியர்கள் 70 பேர் தனியார் கல்லூரிப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
முன்னதாக இந்தப் பேருந்தை ஆர்.புதுப்பாளையம் பள்ளித் தலைமையாசிரியர் மு.ஆ.உதயகுமார் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். உதவித் தலைமை ஆசிரியர்கள் விஜயகுமாரி, ராஜேந்திரன், இமயதாண்டவபூபதி, செüந்திரராஜன், அறிவியல் ஆசிரியர்கள் முத்துகுமார், செந்தில்குமார், சிவக்குமார், சண்முகம், மகாலிங்கம் ஆகியோர் மாணவர்களுடன் உடன் சென்றனர்.