மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 53 பயனாளிகளுக்கு ரூ.64,100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளித்த 478 மனுக்களைப் பெற்று, உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில், 53 பயனாளிகளுக்கு ரூ.64,100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் நா.பாலச்சந்திரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் ராஜேஸ்வரி, வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அசோகன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் சுகுமார், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.