ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்க பணம் கேட்ட ஊழியரை கண்டித்து பொதுமக்கள் நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே வடுகப்பட்டி நியாயவிலைக் கடையில் பொருள் வாங்குபவர்களுக்கு புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை விநியோகம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்க நியாயவிலைக் கடை பெண் பணியாளர் ரூ. 100 பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
பணம் தரம் மறுத்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த சேந்தமங்கலம் வட்ட வழங்கல் அலுவலர் மணிவண்ணன், போலீஸார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலர் செல்வராஜ் ஆகியோர் பொதுமக்களை சமரசப்படுத்தினர். பணம் கேட்டது குறித்து உரிய விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.