பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருக்க லாரியைத் திருப்பியபோது சாலையின் ஓரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து. இரு சக்கர வாகனத்தில் சென்றவர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தர்மபுரி மாவட்டம், படகான்டஹள்ளியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் செந்தில் (29). இவர், ஞாயிற்றுக்கிழமை காலை ஒசூரிலிருந்து லாரியில் முட்டைகோஸ் பாரம் ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கித் சென்று கொண்டிருந்தார். பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே வந்த போது வேலூரில் இருந்து வேலாயுதம்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் சாலையைக் கடந்துள்ளார்.
இதில் சாலையைக் கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியின் ஓட்டுநர் லாரியைத் திருப்பியுள்ளார். இதில், நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு லாரி சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிஷ்டவசமாக லாரியின் ஓட்டுநர் உயிர் தப்பினார். விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.