ஜவுளிக் கடையில் ரூ. 10.50 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டுள்ளதாக மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மோகனூர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் ரவி (48). அவர், பரமத்தி பேரூராட்சியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பரமேஸ்வரி (42). மோகனூர் வாரச்சந்தை வளாகத்தில் பேரூராட்சிக்குச் சொந்தமான கடையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 29-ஆம் தேதி பரமேஸ்வரிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சேந்தமங்கலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். இந்த நிலையில், அவர் சனிக்கிழமை மாலை கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு வேறு பூட்டுப் போடப்பட்டிருந்தது.
இதுகுறித்து மோகனூர் காவல் நிலையத்தில் ரவி புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை போலீஸார் முன்னிலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரூ. 9 லட்சம் மதிப்புள்ள ஜவுளி ரகங்கள், ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள கணினி, சி.சி.டி.வி. கேமரா, யு.பி.எஸ். உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே வேளையில் ரவி அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தியது, பல்வேறு நிதி நிறுவனத்தில் கடன் பெற்றது என 25-க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 40 லட்சம் வரை பெற்று மோசடி செய்துள்ளதாக மோகனூர் போலீஸில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.