டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலை களம் அமைப்பு சார்பில், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தொட்டியப்பட்டி காந்தி நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன் ராசிபுரம் 22-ஆவது வார்டு பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. தற்போது அந்தக் கடையை தொட்டியப்பட்டி பகுதியில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, விடுதலை களம் அமைப்பு சார்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன் அந்த அமைப்பின் தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் டாஸ்மாக் கடை அமைப்பதை கைவிடக் கோரி முழக்கங்கள் எழுப்பினர். பாமக மண்டல செயலர் ஆர்.ஏ.மோகன்ராஜு உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.